புதுடெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலுவை 2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வியூக வகுப்பாளராக காங்கிரஸ் நியமித்தது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி கடந்த 2022 தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி 2023 ஜனவரியில் ஜம்முவில் நிறைவு செய்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் வெற்றிக்கு உத்திகளை வகுத்து கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியமைக்க வித்திட்டார். சுனில் கனுகோலுவின் இந்த சாதனையை தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது. அதன்படி சுனில் கனுகோலு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் கைக்கோர்த்து செயல்பட்டார்.
கர்நாடாகா தேர்தல் பிரசாரத்தில் பேசிஎம் என்ற பாஜவுக்கு எதிரான ஊழல் முழக்கத்தை கையிலெடுத்த சுனில் கனுகோலு, அதேபோல் தெலங்கானாவிலும் கே.சி.ஆர், ஆட்சியின் ஊழல்களை எடுத்து சொல்லி பிரசாரம் செய்ய காங்கிரசுக்கு அறிவுறுத்தினார். அதன் பலனை அறுவடை செய்துள்ள காங்கிரஸ் தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் ஆட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ளது. சுனில் கனுகோலு கடந்த 2018ல் கர்நாடகா பேரவை தேர்தல், 2014 மக்களவை தேர்தல், குஜராத், உத்தரபிரதேச பேரவை தேர்தல்களில் பாஜவுக்காக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ராகுலின் நடைபயண வெற்றிக்கு வித்திட்டவர் தெலங்கானாவில் காங். ஆட்சி அமைக்க வித்திட்ட சுனில் கனுகோலு appeared first on Dinakaran.